அஜித்துக்காக காத்திருக்கும் விஷ்ணுவர்தன்

ரஜினியின் பில்லா படத்தை இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிக்கி டிங்கரிங் பார்த்து அதே பெயரில் சில வருடங்களுக்கு முன்பு எடுத்தார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

அஜித் நடித்த இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி வசூல் சாதனை செய்தது. படம் ஹிட்டானதால் அதன் இரண்டாம் பாகத்தை பில்லா – 2 என்ற பெயரில் எடுத்தனர். சக்ரி டோலட்டி இயக்கிய அந்த இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது.

பிறகு மீண்டும் அஜித் – விஷ்ணுவர்தன் காம்பினேஷன் எப்போது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ‘ஆரம்பம்’ படத்தைக் கொடுத்தார்கள். அந்தப்படமும் ஹிட்டானது. இப்படி அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணியில் ரிலீசாகும் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் கையைக் கடிக்காமல் தப்பித்து விடுவதால் இவர்கள் காம்பினேஷன் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்ப ஆரம்பித்து விடுகிறது.

இப்போது அப்படி ஒரு எதிர்பார்ப்போடு தான் அஜித்துக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் விஷ்ணுவர்தன். தற்போது ஆர்யாவின் தம்பி கிருஷ்ணா நடிப்பில் யட்சன் படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன், அடுத்த படத்துக்கான கதையைக் கூட தயார் செய்து விட்டாராம்

இந்தப்படத்தில் யாரை ஹீரோவாகப் போடுவது என்று முடிவு செய்யவில்லை. ஒருவேளை அஜித் நடிக்க முன் வந்தால் நான் இயக்கத் தயாராக இருக்கிறேன். அவருடன் சேர்ந்து படம் பண்ணுவதே அலாதியான அனுபவம் என்கிறார் விஷ்ணுவர்தன்.