புலியுடன் மோதும் கத்துக்குட்டி

புலியுடன் மோதும் கத்துக்குட்டி

நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ள படம் ‘கத்துக்குட்டி’. இது ‘புலி’ ரிலீஸ் ஆகும் அக்டோபர் 1–ல் திரைக்கு வருகிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் இரா.சரவணன் சொல்கிறார்…

‘கத்துக்குட்டி’ திரைப்படம் தஞ்சை மண்ணின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நரேன் இந்த படத்தில் முதல் முறையாக நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் சூரி இன்னொரு கதாநாயகனாகவே வருகிறார். இருவரும் சேர்ந்து நகைச்சுவையால் ‘தூள்’ கிளப்புகிறார்கள். இது முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி இருக்கிறது.

நகைச்சுவை படம் என்றாலும், இன்றைய தலைமுறையினருக்கு தேவையான கருத்துக்களை சொல்லி இருக்கிறோம். நமக்கு படி அளக்கும் விவசாயிகளின் உழைப்பால்தான் ஒவ்வொரு கவளம் சோறும் நமக்கு கிடைக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையுடன் சேர்ந்து இந்த கதை பயணிக்கிறது.

இந்த கதை பிடித்துப் போனதால் சூரி, நாங்கள் கேட்டதைவிட 3 மடங்கு நாட்கள் அதிகமாக கால்ஷீட் கொடுத்தார். விஜய் சாரின் ‘புலி’ படம் வெளியாகும் நாளில் இந்த படமும் வெளியாகிறது. அப்படி ஒரு வாய்ப்பு அமைந்து இருக்கிறது. வேறு காரணம் எதுவும் இல்லை.

நடிகர் நரேன், ‘இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ‘புலி’படம் ரிலீஸ் தேதியை கேட்டோம். எங்கள் ‘கத்துக்குட்டி’ படம் பற்றியும் சொன்னோம். அதற்கு அவர் நல்ல படம் எப்போது வந்தாலும் ஜெயிக்கும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று வாழ்த்தினார். புலி படம் வெளியாகும் நாளில் அவரது அன்புடன் ‘கத்துக்குட்டி’யும் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

இந்த படம் 240 திரையரங்குகளில் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நரேன், ஸ்ருஷ்டி டாங்கே, பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், இயக்குனர் சரவணன், தயாரிப்பாளர்கள் பி.ஆர்.முருகன், ஆர்.ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.