அஜித்தை வைத்து பாட்ஷா மாதிரியான கதை பண்ண ஆசை : சுரேஷ் கிருஷ்ணா

அஜித்தை வைத்து பாட்ஷா மாதிரியான கதை பண்ண ஆசை : சுரேஷ் கிருஷ்ணா

ரஜினி நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘பாட்ஷா’. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். மும்பையில் மிகப்பெரிய டானாகவும், சென்னையில் சாதாரண ஆட்டோக்காரனாகவும் இருவேறு கெட்டப்பில் ரஜினி நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் 100 நாட்களையும் தாண்டி வெற்றிநடை போட்டது. இந்த படத்தை பற்றி சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய ரஜினி, ‘பாட்ஷா’ படத்தை போன்று இன்னொரு படம் எப்போதும் எடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இதை கேள்விப்பட்ட இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

அவர் கூறும்போது, நான் இயக்கிய படத்தை பற்றி ரஜினியும், மற்றவர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறுவதுபோல், உண்மையிலேயே ‘பாட்ஷா’ படம் போன்று இன்னொரு படம் எடுக்க முடியாது. இந்த படத்தை அந்தளவுக்கு நாங்கள் அணுஅணுவாக ரசித்து எடுத்திருந்தோம். அதனால்தான் மக்கள் மனதில் இன்றும் இப்படம் நிலைத்து நிற்கிறது.

அஜித்தை வைத்து பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நான் அஜித்தை சந்தித்து இதுகுறித்து பேசியது கிடையாது. அஜித் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவரை வைத்து பாட்ஷா மாதிரியான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அமைந்தால் கண்டிப்பாக அவருக்காக கதை அமைத்து படம் இயக்குவேன் என்று கூறினார்.