முதன்முறையாக தான் நடிக்கும் படத்தின் முழுக் கதையையும் படித்த ரஜினி

முதன்முறையாக தான் நடிக்கும் படத்தின் முழுக் கதையையும் படித்த ரஜினி

 இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது, இப்படத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்த ரித்விகாவும் இணைந்துள்ளார். அவருடன் சீன நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இப்படத்தின் முழுக் கதையையும் ரஜினி ஒரே நாளில் படித்து முடித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் சுமார் 220 பக்கங்கள் கொண்ட இப்படத்தின் முழுக் கதையையும் கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினி சாரிடம் படிக்கக் கொடுத்தேன். அவர், அதை எல்லாம் படித்து முடித்துவிட்டு மறுநாளே என்னை அழைத்தார். அவர் என்னிடம், நான் முதன்முதலாக ஒரு படத்தின் முழுக் கதையையும் படித்தது இதுதான் முதல் முறை என்றார்.

கதையை படித்துவிட்டு, இடைவெளிக்கு பிறகு கதையை இப்படி கொண்டு சென்றால் என்ன? இந்த காட்சியை அப்படி அமைத்தால் என்ன? டயலாக்குகளை அவர் பேசிக் காண்பித்து, இப்படி இருந்தால் போதுமா? என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அதையெல்லாம் கேட்டு நான் ஒருநிமிடம் மெய்சிலிர்த்து போனேன்.

அவர் கபாலிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய ஒரிஜினல் தாடியுடன் இப்படத்தில் நடிக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அவரும் ஒத்துக்கொண்டார் என்றார்.