தென் கொரியா திரைப்பட விழாவில் ரேடியோ பெட்டி

தென் கொரியா திரைப்பட விழாவில் ரேடியோ பெட்டி

சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்களின் பங்களிப்பு வருடாவருடம் உயர்ந்து கொண்டே போகிறது. ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ ஆகிய திரைப்படங்கள் சென்ற வருடம் உலகத்தின் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சாதனை படைத்தன.

இப்படங்கள் வரிசையில் இந்தாண்டு கூடுதலாக இன்னொரு படமும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ‘ரேடியோ பெட்டி’ என்கிற தமிழ்த் திரைப்படம் தென்கொரியாவின் புகழ் பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது.

புதிய திரைப்படங்களுக்கான போட்டியாளர் பிரிவில் இப்படம் போட்டியிடுகிறது. 8 படங்களுடன் போட்டியிடும் ‘ரேடியோ பெட்டி’ படம்தான் பூசன் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் இடம் பிடித்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

இந்த பூசன் திரைப்பட விழா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும் தென் கொரியாவில் உள்ள பூசன் என்ற நகரில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் இந்த ‘ரேடியோ பெட்டி’ திரைப்படத்தின் இயக்குனர் ஹரி விஸ்வநாத்தும் கலந்து கொள்ளவுள்ளார்.

‘ரேடியோ பெட்டி’ திரைப்படம் 83 நிமிடங்களே ஓடக் கூடியது. இதில் லட்சுமணன், டி.வி.வி.ராமானுஜம், ஷோபனா மோகன், நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் போர்டு இசையமைத்திருக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சுரேஷ் செல்வராஜன் கவனித்திருக்கிறார். இப்படத்தை எழுதி ஹரி விஸ்வநாத் இயக்கியிருக்கிறார்.