பிரபு தேவா தயாரிப்பில் உருவாகும் வினோதன்

பிரபு தேவா தயாரிப்பில் உருவாகும் வினோதன்

வித்தியாசமான கதைகளுக்கு மூல ஆதாரமே அந்த பட கதாபாத்திரத்தின் அமைப்பு தான். நாயகனின் பாத்திரமோ, நாயகியின் பாத்திரமோ எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு படம் ரசிகர்களை சென்று அடையும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான ‘வினோதன்’ அறிவிப்பு வெளியாகும்போதே முக்கியத்துவம் பெற்று விடுகிறது.

இந்த படத்தை பற்றி அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் கூறும்போது, ‘பொதுவாக தமிழ்படங்களில் மன ரீதியான கதாபாத்திரங்களைப்பற்றி விவரிக்கும்போது, அந்த கதாபாத்திரங்கள் சரியாக சித்தரிக்கப்படவில்லையோ என்ற மனக்குறை என்னிடத்தில் உண்டு. அந்தக் குறையை ‘வினோதன்’ நிவர்த்தி செய்யும். இப்படத்தில் நாயகனின் குணாதிசயம் தமிழ் படங்களில் இதுவரை பார்த்திராதது.

இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகிறவர் மறைந்த நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் ஆவார். முறையாக எல்லா பயிற்சியையும் பெற்றவர். எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் வெளிவர தயாராக உள்ள ‘நைட் ஷோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் வருணுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கவே அவரை நான் முதலில் சந்தித்தேன். அந்த நேரத்தில்தான் நான் வினோதன் கதையை எழுதிக்கொண்டிருந்தேன். இவரை சந்தித்ததில் இருந்தே அந்த கதாபாத்திரத்தை பற்றி யோசிக்கும்போது அவரது முகம் தான் எனக்கு வர ஆரம்பித்தது. இருந்தபோதிலும் மற்றவர்களும் என் கருத்தை ஆமோதிகட்டும், முக்கியமாக தயாரிப்பாளர் பிரபுதேவா ஓகே சொன்னால் போதும் என்று இருந்தேன்.

‘நைட் ஷோ’ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த பின்னர் என் கருத்தே அனைவரது கருத்தும் என்று அறிந்தபோது எனக்கு பெரிய நிம்மதி. தயாரிப்பாளர் பிரபுதேவாவும் ‘சூப்பர்’ என்றவுடனே நான் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக பணிபுரிய ஆரம்பித்தேன். இசை அமைப்பாளராக இமான், பாடல் ஆசிரியராக மதன் கார்க்கி என்று எனக்கு பெரிய பலத்தை சேர்த்து இருக்கிறார் தயாரிப்பாளர் பிரபு தேவா. கதாநாயகி தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

‘வினோதன்’ ஒரு வித்தியாசமான மன நிலை உள்ள மனிதனை பற்றியும் அவனது வினோதமான பழக்கங்களையும் பற்றிய உண்மை கதை ஆகும். ‘வினோதன்’ படம் மூலமாக என்னை இயக்குனராக உயர்த்திய பிரபு தேவாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். இந்தப் படத்தில் நான் பெரும் வெற்றி, என்னைப் போன்ற புதிய இயக்குனர்களுக்கு எதிர் காலத்தில் பிரபு தேவா ஸ்டுடியோஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வாய்ப்பு தர உந்துதலாக இருக்கும் என்பதே என் பொறுப்பு உணர்ச்சியை அதிகப்படுத்துகிறது’ என்றார்.