கபாலி முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க முடிவு

கபாலி முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க முடிவு

ரஜினியின் புதிய படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது, இப்படத்திற்கான அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கடைசியாக இப்படத்திற்கு ‘கபாலி’ என்றும் பெயரிடப்பட்டு விட்டது. சமீபத்தில் இப்படத்தின் போட்டோ ஷுட்டுகளையும் நடித்து முடித்து விட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான, லொக்கேஷன் தேர்வுகள்கூட முடிந்துவிட்டது. மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன்பின்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திவிட்டு, அடுத்தக்கட்டமாக மலேசியா புறப்பட முடிவு செய்துள்ளதாக கபாலி படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. அநேகமாக வருகிற விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக, செப்டம்பர் 17-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ் ராஜ், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் ரஜினி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் முகத்தில் தாடியுடன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.