கேரளாவில் கோலாகலமாக நடந்தது நடிகை பானுவின் திருமணம்

கேரளாவில் கோலாகலமாக நடந்தது நடிகை பானுவின் திருமணம்

‘அச்சன் உறங்காத வீடு’ என்ற மலையாள படத்தின் மூலம் 2005-ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பானு. அதை தொடர்ந்து  இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பிறகு நடிகை பானு தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

தமிழில் நடிகர் விஷால் ஜோடியாக ஹரி டைரக்ஷனில் ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார். தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ என்ற படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாக பானு நடித்திருந்தார். தொடர்ந்து பல மலையாள படங்களிலும் பானு நடித்து வந்தார்.

இந்த நிலையில் மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 23-ந்தேதி கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைதொடர்ந்து  நடிகை பானு – ரிங்கு டோமிக் திருமணம் இன்று (30-ந்தேதி) கொச்சி எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது.

மணமக்கள் இருவரும் கேரள பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர். இதில் மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு நடிகை பானுவை வாழ்த்தினார்கள். இன்று மாலை இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதிலும் மலையாள திரையுலகினர் பங்கேற்கிறார்கள்.