நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன்: சிலம்பரசன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிம்பு, இன்று மீண்டும் தனது பாணியில் அதிரடியாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது:

சிம்பு ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்படியே சாஃப்டாக போயிடுவான் என்று பலர் நினைக்கின்றனர். எந்த மண்ணில் பிறந்த பிள்ளை நான். டி.ஆர். பையன் இப்படி பேசாமல் எப்படி பேசுவான்? உங்களை மாதிரி நல்லவனா நடிச்சு கெட்டவனா இருப்பதைவிட உண்மையை பேசி கெட்டவன்னு பேர் வாங்குறதல நான் வருத்தப்படவே இல்லை. நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேன்.

என்னைவிட்டு மூணு வருசம் போயிட்டாலும், இந்த மூணு வருஷத்துல ஒரு ரசிகன் கூட என்னைவிட்டு போகவில்லை. அதற்கு காரணம் என்னிடம் இருந்த உண்மை. அதேபோல் இந்த அணியிடம் உண்மை இருக்கின்றது. அந்த உண்மைக்காக நான் இங்கே நின்று கொண்டு அவர்களுக்காக பேசுகின்றேன்.

விஷால், கார்த்தி எல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். ஆனாலும் அவர்களை நான் விமர்சனம் செய்ய காரணம் அவர்களுடைய அணுகுமுறை சரியில்லை. எந்தவொரு குற்றச்சாட்டை சொல்வதாக இருந்தாலும் ஒரு  முறை இருக்கின்றது, ஒரு அணுகுமுறை இருக்கின்றது. ஆனால் அந்த அணியினர்களின் அணுகுமுறை தவறாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. நமக்குள் இருக்கின்ற பிரச்சனையை நாமே பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வந்த கோபம்தான் எனக்கு உள்ளது.

சரத்குமாரும், ராதாரவியும் நடிகர்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளனர். இந்தளவுக்கு நன்மை செய்த அவர்களுக்கு கண்டிப்பாக நல்லதுதான் நடக்கும். எனவே இந்த அணி கண்டிப்பாக வெற்றி பெறும், பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’ என சிம்பு பேசியுள்ளார்