நயன்தாரா திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்: சிம்பு அதிரடி பேட்டி

நயன்தாரா திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்: சிம்பு அதிரடி பேட்டி

சிம்பு-ஹன்சிகா ஜோடியாக நடித்த ‘வாலு’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடந்தது. இதில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘வாலு’ படம் வெளிவருவதில் தடங்கல்கள் ஏற்பட்டன. நடிகர் விஜய் மற்றும் எனது தந்தை, தாய் உள்ளிட்ட பலரின் உதவியால் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரஜினிகாந்த், அஜித்குமார் என பலர் ஆதரவாக பேசினார்கள். எல்லாருக்கும் நன்றி.

இப்போதெல்லாம் ஆன்மீக ஈடுபாடு காரணமாக நிறைய பக்குவப்பட்டு விட்டேன். படத்துக்கு வந்த பிரச்சினைகளுக்கான காரணத்தையும் நானே ஏற்கிறேன். முதுகில் குத்துபவர்கள் பற்றி கவலையில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார்.

இனிமேல் வருடத்துக்கு 2 அல்லது 3 படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். என் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதையும் கடவுளே முடிவு செய்வார். தனியாக நான் வாழவேண்டுமா? திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? என்பது கடவுள் கையில் இருக்கிறது.

நயன்தாராவை நான் பிரிந்தது பற்றி கேட்கிறார்கள். நயன்தாராவை விட்டு நான் பிரிந்த பிறகு மீண்டும் அவருடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்கிறீர்களே? என்றும் கேட்கிறார்கள்.

காதலில் நான் நிறைய அடிபட்டு விட்டேன். நயன்தாராவும், நானும் எதிர்மறையான சிந்தனையோடு பிரியவில்லை. ஒரு சூழ்நிலை காரணமாக சேர்ந்து இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே பிரிந்துவிட்டோம். கோபித்துக்கொண்டு விலகவில்லை. அதனால் தான் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.

டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்களா? என்று கேட்கிறீர்கள். அவர்கள் காதலிப்பதாக இதுவரை சொல்லவில்லை. இதேபோல் தான் பிரபுதேவாவை நயன்தாரா காதலிக்கிறாரே? என்று கேட்டார்கள். நான் நடக்கும்போது கேளுங்கள் என்று பதிலளித்தேன். அது நடந்ததா?. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதலித்தால் சந்தோஷம் தான். அவர்களுடைய திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.