சிம்புவின் வாலு படத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சிம்புவின் வாலு படத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சிம்பு நடிப்பில் நீண்டகால தயாரிப்பில் இருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆண்ட்ரியாவும், சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படம் வருகிற ஜூலை 17-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘வாலு’ படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே எங்களைத் தவிர வேறு நபர் மூலமாக ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வாலு’ தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை ‘வாலு’ படம் வெளியிட தடைவிதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

எனவே, திட்டமிட்டபடி ‘வாலு’ படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துள்ளது.