அஜித் படத்தின் பாடலை தலைப்பாக்கிய டெய்சி படக்குழுவினர்

அஜித் படத்தின் பாடலை தலைப்பாக்கிய டெய்சி படக்குழுவினர்

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள், தலைப்பாக வருவது அந்த பாடலின் வெற்றி படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால்தான். அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்று மிக பிரபலமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலின் முதல் வரியில் ஒரு படம் உருவாகிறது.இப்படம் குறித்து இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூறும்போது, ‘டெய்சி’ என்று முதலில் தலைப்பிடப்பட்ட இந்த படத்துக்கு கதையின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்குமென்பதால் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ என்று தலைப்பு வைத்து இருக்கிறோம். இந்த கதை அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையாக இருந்தாலும், மூல கருத்து ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் கதைதான். இந்தக் கதைக்கு பொருத்தமாக பல தலைப்புகள் தேடினோம், எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ தலைப்பாகதான் இருந்தது. தந்தை மகள் உறவை சித்தரிக்க இதைவிட சிறந்த தலைப்பு எது?.

எந்த உறவிலும் உறுதிமொழி முக்கியமானது. மற்ற உறவுகளைவிட தந்தை மகளுக்குள் இருக்கும் உறவும், அதன் வாயிலாக கொடுக்கப்படும் உறுதிமொழியும் காலத்தை தாண்டி நீடிக்கும் என்பர். அப்பேற்பட்ட ஒரு தந்தை, கருவில் இருக்கும் தன் சிசுவிடம் கொடுக்கும் உறுதிமொழி, அதைக்காப்பாற்ற முடியாமல் அவர் திசைமாறும் சூழ்நிலை, காப்பாற்ற படாத உறுதிமொழியின் காரணமாக உயிரிழக்கும் அந்தக் குழந்தை பின்னர் ஆவியாகி தன்னுடைய நிலைமைக்கு பழி வாங்கும் சூழ்நிலை என்று தட தடக்கும் திரை கதை மூலம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’.

இந்த வகை படங்கள் பொதுவாக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் இந்தப் படம் சில பல நிஜ சம்பவங்களின் கோர்வையாகும். அயுரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகெங்கும் திரையிட உள்ளனர். ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ள இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை’’ என்றார்.