‘‘எவன் அவன், ஒரு வீடியோ படத்தை கருவாக கொண்ட மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். வில்லனாகவே பல படங்களில் நடித்து வந்த நான், இந்த படத்தில் நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இரண்டாவது கதாநாயகன் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அது. இந்த வேடத்தில் நடிப்பதற்காக 8 மாதங்கள், ‘ஜிம்’மிலேயே இருந்தேன். கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுக்கு மாறினேன்.
இதற்கு முன்பு நான் நடித்த ‘சண்டமாருதம்’ படத்தின் போது, என் உடல் எடை 90 கிலோவாக இருந்தது. அதை 18 கிலோ குறைத்து இப்போது, 72 கிலோவுக்கு வந்து இருக்கிறேன். ‘எவன் அவன்’ படத்துக்காக, நான் சட்டை அணியாமல் வெறும் உடம்புடன் ஸ்டண்ட் மாஸ்டர் குன்றத்தூர் பாபுவுடன் மோதுவது போன்ற ஒரு பயங்கர சண்டை காட்சி, ஆந்திர மாநிலம் வாக்கடு என்ற இடத்தில், 2 நாட்கள் படமாக்கப்பட்டது.
சண்டை காட்சியை திரையிட்டு பார்த்த டைரக்டர் நட்டிகுமார், மிக சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டினார். சரத்குமார், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு போன்ற பிரபல கதாநாயகர்களுக்கு வில்லனாக இதுவரை 32 படங்களில் நடித்து விட்டேன். அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ‘எவன் அவன்’ படத்துக்கு பிறகு என் ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.’’
இவ்வாறு நடிகர் வின்சென்ட் அசோகன் கூறினார்.