நண்பர் பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கிய சிவகார்த்திகேயன்

நண்பர் பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கிய சிவகார்த்திகேயன்

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வெற்றிப்பாதையின் வரிசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது நீண்டகால நண்பர் ஆர்.டி.ராஜாவை வைத்து ‘24ஏ.எம். ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் சிவகார்த்திகேயனே நடிக்கவிருக்கிறார். மேலும், மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை இதில் களமிறக்கியிருக்கிறார்.

இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்குகிறார். முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரான அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

அனல் அரசு சண்டை பயிற்சியாளராகவும், முத்துராஜ் கலை இயக்குனராகவும், ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கார் விருது வென்றவரான ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவையை மேற்கொள்ளவிருக்கிறார்.

மேலும், ‘லார்ட் ஆப் த ரிங்ஸ்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கும், தமிழில் ‘ஐ’ படத்திற்கும் பணியாற்றிய சீன் பூட், ஸ்பெஷல் மேக்கப் மேனாக பணியாற்றுகிறார்.

இவ்வளவு பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை தனது முதல் தயாரிப்பிலேயே சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வியப்பை கொடுத்திருக்கிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ‘அவ்வை சண்முகி’ போன்றதொரு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தது. அதற்காகத்தான் ஹாலிவுட் மேக்கப் மேனை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.