புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்: நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படம் இதுதான். மேலும், ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் வெளிந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் இடம் பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை செய்து முடித்து பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞன். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை. இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார். அத்துடன் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை.

அதுமட்டுமின்றி இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை. அதனால் தவிர்த்திருக்கிறேன். அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது என்றார்.

‘ரஜினிமுருகன்’ படம் வருகிற டிசம்பர் 4-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.