சரத்குமார் போட்ட ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்கம் என்ற அடையாளமே இருக்காது: நாசர் பேட்டி

சரத்குமார் போட்ட ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்கம் என்ற அடையாளமே இருக்காது: நாசர் பேட்டி

நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான ஒப்பந்தம் குறித்து சரத்குமார் நேற்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்து விஷால் அணி சார்பாக நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் கூறியதாவது:–

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டுவது குறித்து 3 ஒப்பந்தங்கள் போட்டு இருக்கிறார்கள். பல பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தால்தான் உண்மை நிலை தெரியும்.

8 மாதங்களுக்கு முன்பே அந்த ஒப்பந்தம் பற்றிய விவரங்களை நாங்கள் கேட்டோம். ஆனால் தரவில்லை. இப்போது பத்திரிகையாளர்களிடம் கோர்ட்டு மூலம் வாங்கிய ஒரு ஒப்பந்தத்தை பொதுவாக சரத்குமார் காட்டி இருக்கிறார். நாங்கள் கேட்டபோது ஒப்பந்தத்தை எங்களிடம் காட்டி இருந்தால் அது சரியான ஒப்பந்தமாக இருந்தால் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் நிலை வந்திருக்காது.

இந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்க நிலம் முழுவதும் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டிக் கொள்ளும், நடிகர் சங்கத்துக்கு ஏதோ ஒரு சிறிய அலுவலகம் கிடைக்கும். இதனால் நடிகர் சங்கத்தின் அடையாளமே போய்விடும். வருமானம் மட்டும் பெரிதல்ல. மூத்த கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு வாங்கிய அந்த இடத்தை அடையாளம் இல்லாமல் செய்வது தவறு. இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.