சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கான பணிகள் தொடங்கியது

சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கான பணிகள் தொடங்கியது
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ படத்திற்கு பிறகு இந்த வருடத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படம் முடிவடைந்தும், பல்வேறு காரணங்களால் வெளியாக முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இந்நிலையில், அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியராக ரசூல் பூக்குட்டி, இசையமைப்பாளராக அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் என பிரம்மாண்ட கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் பூஜை நடந்து முடிந்துவிட்டாலும், படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது. அதற்கு முன்னதாக, படத்திற்காக போட்டோ ஷுட் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிவகார்த்திகேயேனும் – கீர்த்தி சுரேஷும் ஏற்கெனவே ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்கள் இணையும் இரண்டாவது படம் இது.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.