அமீர்கானுடன் மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான்

அமீர்கானுடன் மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான்

அமீர் கானின் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அத்வைத் சவ்கான் இயக்கும் திரைப்படத்துக்காக அமீர்கான் பாடும் திறன்கொண்ட அறிமுக நடிகையைத் தேடி சமீபத்தில் டுவீட் செய்திருந்தார்.

இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்க இருக்கும் அந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.

பாடும் திறமை கொண்ட நாயகியை அமீர்கான் தேடியதால், இது நிச்சயம் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இருக்கும் என்பது தெரிகிறது. எனவே, படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.ரகுமானை அமீர்கான் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமீர் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அமீர்கான் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்த முதல் படமான ‘லகான்’ படத்திலும் ஏ.ஆர். ரகுமான்தான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ஆஸ்கர் வரை பேசப்பட்டது.

இதேபோல, அமீர்கான் நடிப்பில் பாலிவுட்டின் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ‘ரங்கீலா’ படமும் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்திருந்தது. ‘ரங்கீலா’, ‘எர்த்’, ‘லகான்’, ‘மங்கள் பாண்டே’, ‘ரங் தே பசந்தி’, ‘ஜானே து யா ஜானே நா’, ‘கஜினி’ என அமீர்கானின் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட படங்களில் வெற்றிக்கொடி நாட்டிய ‘அமீர்கான்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி, 2008-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் இணையவிருக்கிறது.

இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து உருவான அத்தனைப் படங்களும் சிலிர்க்க வைக்கும் இசையோடு வெளிவந்து ரசிகர்கள் மனதை ஆட்கொண்டதால் இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.