ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்தது பற்றி ஏ.ஆர். ரஹ்மானின் உருக்கமான விளக்கம்
முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகடாமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்தது பற்றி ஏ.ஆர். ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது “ நான் அந்த படத்தை தயாரிக்கவோ அல்லது இயக்கவோ இல்லை. வெறும் இசை மட்டும் தான் அமைத்துள்ளேன். இந்த படத்தில் வேலை செய்தது மூலம் எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்துக்கொள்ள விருப்பம் இல்லை. நான் இந்த படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு. இது தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.