விஜய்யை இணையதளம் மூலம் அவமானப்படுத்துவதாக புகார்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரசிகர்கள் மனு

விஜய்யை இணையதளம் மூலம் அவமானப்படுத்துவதாக புகார்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரசிகர்கள் மனு

 
குமரி மேற்கு மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் ஜோஸ்பிரபு தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் சகாயம் உள்பட திரளானவர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஜோஸ்பிரபு கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை தமிழக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விஜய்யையும், அவருடைய குடும்பத்தாரையும் இணையதளம் மூலம் அவமானப்படுத்தியும், அருவருக்கத்தக்க, சகிக்க முடியாத வாசகங்களால் சித்தரித்தும் வந்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் இருந்த பக்கம் நீக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் அந்தப் பக்கம் செயல்படத்தொடங்கி, வழக்கம்போல் அவதூறுகளை பரப்பி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சோபலட்ச ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். எனவே விஜய் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் இணையதளத்தை இயக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்தும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள அருவருக்கத்தக்க பக்கங்களை நீக்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.