சூர்யா படத்தைக் கைப்பற்றிய தெலுங்குநடிகர்

யாவரும்நலம் படத்தை இயக்கிய விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் 24. பெரும்பகுதிப்படப்பிடிப்பு மும்பையிலேயே நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை இயக்கும் விக்ரம்குமார் கடைசியாக இயக்கிய படம் மனம். நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா மற்றும் அவருடைய மகன்கள் நடித்த அந்தப்படம் தெலுங்கில் வெளியாகி பெரியவெற்றியைப் பெற்றது.

அதற்கடுத்து அந்த இயக்குநர் சூர்யா படத்தை இயக்குகிறார் என்பதாலும் சூர்யாவுக்குத் தெலுங்கிலும் பெரும் ரசிகர்கூட்டம் இருப்பதாலும் தமிழைப்போலவே தெலுங்கிலும் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே தெலுங்கில் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற போட்டி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்போட்டியில் தெலுங்குநடிகர் நிதின் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே இயக்குநர் விக்ரம்குமார், சூர்யா, சமந்தா ஆகியோர் இருப்பதாலேயே தெலுங்கிலும் பெரியபடமாக இருந்தது. இப்போது நிதின் அந்தப்படத்தை வாங்கியிருப்பதால் இன்னும் பெரியபடம் ஆகிவிட்டது என்கிறார்கள்.