புலி படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி

புலி படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி

முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவி ராணி வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் அக்டோபர் 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஸ்ரீதேவி தனது சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறாராம். விஜய் படங்களுக்கு எப்போதும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்த ‘ஜில்லா’ படம் அங்கு வெற்றிநடை போட்டது. அதுமட்டுமில்லாமல், தற்போது ‘புலி’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமை சுமார் ரூ.12 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘புலி’ படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், பிரபு, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்க, நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.