ஜெயம்ரவி–நயன்தாரா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘தனி ஒருவன்’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தெலுங்கு, இந்தி தயாரிப்பாளர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் கதையை ராஜாவே எழுதியுள்ளார். இவர் இதுவரை 8 படங்கள் இயக்கி இருக்கிறார். இதில் 7 படங்கள் வேறு மொழி படங்களின் ‘ரீமேக்’. இதுபோல் ஜெயம்ரவி அவரது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் 6 படங்கள் நடித்துள்ளார். இதில் 5 படங்கள் ‘ரீமேக்’.
இப்போது முதல் முறையாக ராஜா கதை எழுதி இயக்கியுள்ள ‘தனி ஒருவன்’ படத்தை, ரீமேக் செய்ய தெலுங்கு, இந்தி பட உலகினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
‘தனி ஒருவன்’ கதை பற்றி தெரிந்து கொண்ட இந்தி நடிகர் சல்மான்கான் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக இந்த படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்து உள்ளார். விரைவில் அவருக்கு இந்த படம் திரையிட்டு காட்டப்படுகிறது. அதன் பிறகு இதன் ரீமேக்கில் நடிப்பது குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது.