ஜெயம் ரவியை வழி நடத்தி செல்லும் நயன்தாரா

ஜெயம் ரவியை வழி நடத்தி செல்லும் நயன்தாரா

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தனி ஒருவன்’. இவருடைய அண்ணனான ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இப்படத்தில் தன்னுடைய பெயரை மோகன் ராஜா என்று மாற்றியுள்ளார். இவர் இயக்கிய முதல் படமான ‘ஜெயம்’ வெற்றி பெற்றதால் ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது தன்னுடைய பெயரை மாற்றியிருக்கிறார்.இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் குறித்து மோகன் ராஜா கூறும்போது, “நான் இப்படம் மூலம் என்னுடைய பெயரை மோகன் ராஜா என்று மாற்றியிருக்கிறேன். என்னுடைய முதல் படம் ‘ஜெயம்’ வெற்றி பெற்றதால் ரசிகர்கள் ஜெயம் என்று என்னை அழைத்தார்கள். ஆனால் ஜெயம் ராஜா என்று எங்கும் என் பெயரை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், நான் வெற்றி பெற காரணமாக இருந்த என்னுடைய அப்பா மோகன் பெயரை என் பெயருடன் சேர்த்துள்ளேன்.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முதல் தடவையாக ஜெயம் ரவி போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு போராளியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. என்னுடைய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பேன். அந்த வரிசையில் நயன்தாரா தடயவியல் நிபுணராக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியை வழி நடத்திச் செல்லும் அளவிற்கு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். ஆதி இப்படத்திற்கு இசையமைத்து அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதியிருக்கிறார். மொத்தம் 5 பாடல்கள். இதில் மூன்று மான்ட்டேஜ் பாடல்களாக இருக்கும். இப்படம் சமூகத்தின் அக்கறை கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு என்னுடைய இயக்கத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. வேலாயுதம் படத்திற்குப் பிறகு தமிழில் வெற்றி பெற்ற ‘ரமணா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தை என்னுடைய பாணியில் எடுக்க முயற்சி செய்தேன். சில பிரச்சனைகள் எழுந்ததால் அந்த படத்தில் இருந்து விலகினேன். வேலாயுதம் படம் எடுக்கும் போதே ‘தனி ஒருவன்’ படத்தின் கதையை உருவாக்கினேன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் கொஞ்சம் பிசியாக இருந்ததால் இப்படம் எடுக்க காலதாமதம் ஆகிவிட்டது.

சென்னை மற்றும் புனேவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.