ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க நயன்தாரா தயங்கவில்லை: டைரக்டர் அஸ்வின் சரவணன் பேட்டி

ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க நயன்தாரா தயங்கவில்லை: டைரக்டர் அஸ்வின் சரவணன் பேட்டி

நயன்தாரா-ஆரி நடித்து, அஸ்வின் சரவணன் டைரக்ஷனில், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம், மாயா. இது, திகில் நிறைந்த பேய் படம். இந்த படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைரக்டர் அஸ்வின் சரவணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

‘‘நடிகர் சூர்யாவின் தம்பி (சித்தி மகன்) பிரபு உள்பட 5 நண்பர்கள் சேர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களை சந்தித்து நான் சொன்ன ஒரே கதை, ‘மாயா.’ இது, நிறைய உழைப்பு தேவைப்படுகிற கதை. திரைக்கதையை சொல்லும் விதத்தில் வித்தியாசம் இருக்கும். இந்த கதையை நயன்தாராவிடம் சொன்னதுமே உடனே நடிக்க சம்மதித்தார்.

‘‘படத்தில், நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும்’’ என்று கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னேன்.

‘‘நான் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில், 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்து இருக்கிறேன். நீங்கள் பார்க்கவில்லையா?’’ என்று கேட்டதுடன், எந்தவித தயக்கமும் இல்லாமல், ‘மாயா’ படத்தில் நடித்தார். ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்தது. பெரும்பகுதி காட்சிகள் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டன. நயன்தாரா முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தார்.

வழக்கமான நயன்தாராவை இந்த படத்தில் பார்க்க முடியாது. வேறு ஒரு நயன்தாரா தெரிவார். படத்தில், ஆரி ஒரு ஓவியராக வருவார். இது, ஒரு அழுத்தமான திரைக்கதை. பேய்க்கு பயப்படாதவர்கள் கூட, படத்தைப் பார்த்து பயப்படுவார்கள்.’’

இவ்வாறு டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆரி, மைம்கோபி, பட அதிபர் பிரபு, இசையமைப்பாளர் ரோன் ஈதன் யோஹன், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.