இறுதிச்சுற்று டப்பிங் பணியை தொடங்கிய மாதவன்
மாதவன் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் ‘வேட்டை’. இப்படத்திற்கு பிறகு ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடனேயே, இந்தியில் தயாரான ‘தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க மும்பைக்கு பறந்துபோனார்.
அந்த படத்தின் பணிகளிலேயே மும்முரம் காட்டிய மாதவன், ஒருவழியாக அப்படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிட்டார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், மாதவன் தற்போது அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது இவரது கவனம், இவர் பாதியில் விட்டுச்சென்ற ‘இறுதிச்சுற்று’ படத்தின் பணிகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து மாதவன் கூறும்போது, தற்போது சென்னையில் இருக்கிறேன். ‘இறுதிச்சுற்று’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களுக்கு இன்னொன்று தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
‘இறுதிச்சுற்று’ படத்தை ‘துரோகி’ என்ற படத்தை இயக்கிய சுதா கே.பிரசாத் இயக்கியுள்ளார். இதில் மாதவன் பாக்ஸராக நடித்துள்ளார். இதற்காக நீண்ட தலைமுடி, தாடி வைத்து நடித்திருந்தார். தமிழ், இந்தியில் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இந்தி பதிப்புக்கு ‘சால காதூஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.