பழவந்தாங்கலில் நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாவின் மகன்  மரணம்: படுக்கையில் பிணமாக கிடந்தார்

பழவந்தாங்கலில் நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாவின் மகன்  மரணம்: படுக்கையில் பிணமாக கிடந்தார்

நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாவின் மகன் சிவாஜிராவ் (வயது 48). சென்னை பழவந்தாங்கல் அவ்வையார் தெருவில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தபோது அவர் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் படுக்கையில் பிணமாக கிடப்பது தெரிந்தது.
சந்தேகம் அடைந்து உடனே பழவந்தாங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பூட்டிய வீட்டை உடைத்தனர். அங்கு படுக்கையில் அவர் பிணமாக கிடந்தார். பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் அவரது தம்பி ராஜேந்திர ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. படுக்கையில் உயிர் இழந்த சிவாஜிராவுக்கு திருமணம் ஆகவில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்ததாகவும், ஆனால் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காததால் விரக்தியில் காணப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அவர் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த செல்போன் எண்களின் உதவியால்தான் அவர் ஒருவிரல் கிருஷ்ணா ராவின் மகன் என அடையாளம் காண முடிந்தது.