பஞ்ச் வசனங்களே இல்லாமல் உருவாகும் கபாலி

பஞ்ச் வசனங்களே இல்லாமல் உருவாகும் கபாலி

ரஜினி நடித்து வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் ஆகியோர் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர்.

சென்னையில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, இம்மாத இறுதியில் படக்குழு மலேசியா பயணப்படவிருக்கிறது. ரஜினியின் படங்கள் என்றால், அதில் இடம்பெறும் பஞ்ச் வசனங்கள்தான் ரசிகர்களை பெரிதும் கவரும். அந்த வகையில், இந்த படத்திலும் நிறைய பஞ்ச் வசனங்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படத்தில் பஞ்ச் வசனங்களே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறும்போது, இப்படத்தின் தலைப்பான ‘கபாலி’ என்ற பெயரை கூறும்போதே, ஒரு பஞ்ச் வசனம் போல் இருக்கும். அப்படியிருக்கும்போது, இப்படத்திற்கு வேறு எந்த பஞ்ச் வசனமும் தேவைப்படாது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் கதைக்கு பஞ்ச் வசனம் எதுவும் தேவையில்லை என்பதற்காகவே, இதில் எந்த பஞ்ச் வசனத்தையும் திணிக்கவில்லை என்று கூறினார்.