கமலை வைத்து படம் இயக்குகிறேனா? : ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம்

கமலை வைத்து படம் இயக்குகிறேனா? : ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஆதிக் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் கமல்ஹாசனின் ஆசி பெற அணுகியபோது, பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார்.

அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்தபோது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நினைவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் பார்க்கும்படி அவரிடம் கோரிக்கை வைத்தபோது, பெருந்தன்மையுடன் பரிசீலிப்பதாக கூறினார்.

இந்நிலையில் ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

சினிமா வாழ்வில் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள். இந்த செய்தி பிரசுரித்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.