இந்தியப் பெண் பிரசவித்த ‘பிளாஸ்டிக்’ குழந்தை
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தையை, கிட்டத்தட்ட மொத்த மருத்துவமனையும் வந்து வேடிக்கை பார்த்துவிட்டுப் போகிறது. காரணம், பிளாஸ்டிக் பொம்மை போல இருக்கும் அதன் தோற்றம்!
‘‘பிளாஸ்டிக் மாதிரியே கனமா இருக்கு இவ தோல். கண்ணும், உதடும் சிவந்து போயிருக்கு. அவளால பால் குடிக்க முடியல. தொட்டாலே அழறா. அதான் இங்க தூக்கிட்டு வந்திருக்கோம்.’’ என்று பதற்றமாகச் சொல்கிறார், பிறந்து சில நாட்களே ஆன அந்தப் பெண் குழந்தையின் கிராமத்து தாய்.
மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை சிறப்பு மருத்துவர் பன்னு, ‘‘இது ஒருவித மரபுக்குறைபாட்டால் ஏற்படும் பிரச்னை. ஆறு லட்சத்தில் ஒரு குழந்தை இப்படிப் பிறக்க வாய்ப்புள்ள அரிய வகை நோய் இது. இந்தப் ‘பிளாஸ்டிக்’ குழந்தைகளை மருத்துவ மொழியில் ‘கொலோடியன் பேபி’ என்று அழைப்போம்.
நெகிழ்வுத்தன்மையற்ற இறுக்கமான சருமம், அசைவுகளின்போது அதிக வலி கொடுக்கும். கண்களைக் கூட இமைக்க முடியாது. மெழுகு போன்ற தோற்றமுள்ள இந்தக் குழந்தைகளின் சருமம், பிறந்த மேனியின் செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் உருவாகும் ஒரு மாத காலத்தில், இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். சில குழந்தைகளுக்கு, வாழ்நாளுக்கும் இந்தப் பிரச்னை தொடரும்.’’ என்றார்.
குருநானக் தேவ் மருத்துவமனையில் பார்ப்பவர்கள் எல்லாம் பிரார்த்திக்கிறார்கள் அந்தப் பிளாஸ்டிக் குழந்தைக்காக!