தேனி அருகே உள்ள பெரியகுளத்தில் கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி கவிஞர் வைரமுத்து பேசியதாவது:– ஏழ்மையால் யாருக்கும் கல்வி கிடைக்காமல் இருக்க கூடாது. அறிவை பொது உடமை ஆக்க வேண்டும். அனைவரும் கல்வி கற்று முன்னேறினால் மட்டுமே நாடு வல்லரசு ஆனதாக பெருமை கொள்ளமுடியும்.
சமுதாயம், பள்ளி, குடும்பம் உட்பட சூழ்நிலைகள்தான் மாணவர்களின் தோல்விக்கு காரணம். தேர்வில் தோல்வி என்பதற்காக ஒருவர் கூட தற்கொலை செய்யக்கூடாது. தற்கொலை உணர்ச்சியை சமூகத்தில் இருந்தே கிள்ளி எறிய வேண்டும். வறுமை, ஒழுக்கமற்ற குடிகார தந்தைகளிடம் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்.
இப்படி மீட்டால் தமிழகம் முதல் மாநிலமாக முன்னேறும். யோகா மதம் சார்ந்த விஷம் இல்லை. அது விஞ்ஞானம். உடலுக்கு யோகா பயிற்சி அவசியம். எனவே யோகா அனைவரும் கற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.