திருமண முறிவுக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன்: திரிஷா

திருமண முறிவுக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன்: திரிஷா

திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி பிறகு அது முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டனர். திரிஷா தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில், திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி: திருமணம் முறிந்தால் நிறையபேர் ஓய்ந்து போவது உண்டு. நீங்களோ பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க்கையை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இதுபோன்ற சூழலில் பலரும் உடைந்து போவது உண்மைதான். ஆனால் என்னை எளிதில் இவை பாதிப்படைய செய்யாது. நான் எல்லா விஷயங்களிலும் ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கிறேன். எனது வாழ்வின் முடிவுகளை மனமும் இதயமும் சேர்ந்தே எடுக்கின்றன. நான் எனது குடும்பத்தினருடன் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கே: திருமண முறிவுக்கு பிறகு உங்களை பற்றி நிறைய வதந்திகள் பரவுகிறதே? முறிவுக்கான காரணம் என்ன?

ப: வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்க முடியாது. வதந்திகள் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது வாழ்க்கையின் முக்கிய நபராக எனது அம்மா இருக்கிறார். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இல்லை. இதுபோன்ற விஷயங்கள் நிகழும்போது வதந்திகள் கிளம்புவதும் மக்கள் குழப்பமடைவதும் சகஜம் தான்.

திருமண முறிவுக்கான காரணம் பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதில் நிறையபேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை இதில் இழுக்க விரும்பவில்லை. இது ரொம்ப தனிப்பட்ட விஷயம். நான் இப்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே நடந்த விஷயங்களை மீண்டும் தோண்ட விரும்பவில்லை.

கே: திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா?

ப: நான் திருமண பந்தத்தை இப்போதும் நம்புகிறேன். ஆனால் திருமணம் சமுதாயத்துக்கு ரொம்ப அவசியமானது என்பதை நம்பவில்லை. சமுதாய தேவைக்காக திருமணம் செய்து கொண்டு பாதிக்கப்பட்ட நிறைய பேரை நான் பார்த்து இருக்கிறேன். காதலிக்கிற ஒருத்தரை திருமணம் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக திருமணம் கூடாது. வயது என்பது பிரச்சினை இல்லை. நான் இருப்பதைந்து வயதில் அந்த மாதிரி ஒரு மனிதரை சந்தித்து இருந்தால் இப்போது அவரை திருமணம் செய்து கொண்டு இருப்பேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.