கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற இயக்குனர் மோகன் ராஜா

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற இயக்குனர் மோகன் ராஜா

ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குனர் மோகன் ராஜா, முதன்முறையாக தன்னுடைய சொந்த திரைக்கதையில் ‘தனி ஒருவன்’ படத்தை உருவாக்கியுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், நாயகன் ஜெயம் ரவி ஐ.பி.எஸ் பயிற்சி பெற்று வருவதாக தொடங்கும் இந்தப்படம் வேகமாக நகரும் கதைக்களத்துடன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல மொழி நடிகர்களும் இதன் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குனர், கெளதம் வாசுதேவ் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘ரசிகர்களை கட்டாயப்படுத்தி இருக்கையில் உட்கார வைப்பதற்கு பதிலாக, கதையோடு சேர்ந்து பயணம் செய்ய வைத்துள்ளீர்கள்! அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்!’ என்று குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, மோகன் ராஜா, தன்னுடைய சொந்தக் கதையை இயக்குவதற்கான நேரம் வந்ததை எண்ணியும் மகிழ்வதாக அவர் தெரிவிதுள்ளார்.

கெளதம் மேனனின் இயக்கத்தில் வந்த போலீஸ் சார்ந்த படைப்புகள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தன. சக இயக்குனரை மனமார வாழ்த்தியுள்ள கெளதம் மேனனின் பண்பு தற்போதைய இயக்குனர்கள் ஒருவரை ஒருவர் மதித்து கண்ணியத்துடன் நடந்துகொள்வதைக் காட்டுகிறது.

வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் ‘தனி ஒருவன்’ படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் இன்னும் குறையவில்லை.