நகைச்சுவை நடிகர்களை நான் போட்டியாக கருதவில்லை: சந்தானம்

மற்ற நகைச்சுவை நடிகர்களை நான் போட்டியாக கருதவில்லை என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சந்தானம் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ள இனிமே இப்படித்தான் திரைப்படம் வருகிற 12–ந் தேதி 300–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே இப்படத்தின் கரு. அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் காமெடி கலந்த கதையம்சம் கொண்டதாக இந்த படம் இருக்கும்.

புதிய இயக்குனர்களை வைத்து மேலும் பல திரைப்படங்களை தயாரிக்கும் திட்டமும் உள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் கதாநாயகனாக நடிப்பதோடு தொடர்ந்து நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன்.

நடிகர்கள் ஆர்யா, விஷால், உதயநிதி ஸ்டாலின் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கும் எண்ணமும் உள்ளது. கமலஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

சிம்ரன் எனக்கு பிடித்த நடிகை. வசனங்களை குறைத்து பாடி லேங்குவேஜை அதிகம் வைத்து விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளேன்.

திரைப்படத்தை எடுப்பது காதல் செய்வது போல தான், ஆனால் படத்தை ரிலீஸ் செய்வது குடும்பம் நடத்துவது போல பல கஷ்டங்கள் உள்ளது. மக்களை மகிழ்விக்க தான் காமெடி செய்கிறேன். சில நேரங்களில் அதற்கு எதிர்ப்பு கிளம்புவது வருத்தம் அளிக்கிறது.

நடிகர்கள் வடிவேலு, கருணாசுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நகைச்சுவை உணர்வு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மற்ற நகைச்சுவை நடிகர்களை நான் போட்டியாக கருதவில்லை. என் திறமையை வளர்த்து சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

விளம்பரங்களில் நடிப்பதற்கு நடிகர்களை தண்டிப்பது சரியானதல்ல என்றார். அப்போது அவருடன் பட வினியோகஸ்தர் ஜி.டி. பிலிம் தியாகராஜன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *