‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் கிஷோர். அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கிஷோர், கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் கிஷோர், தற்போது ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்நிலையில் கிஷோரும் அதற்கு பக்கபலமாக இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.