சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியங்கா சோப்ரா?

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல தொழிலதிபரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான நந்திதா சின்ஹா எடுக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நந்திதா சின்ஹாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எங்களுடைய டோட்டல் பிரசென்டேஷன் டிவைசஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை அவருடைய 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கவும் உள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ், தெலுங்கில் இப்படத்தை முதலில் எடுத்துவிட்டு, பிறகு இந்தியிலும் எடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

சூர்யா தற்போது ‘மாஸ்’ படத்தை முடித்துவிட்டு விக்ரம் குமார் இயக்கும் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும், ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா, ஏற்கெனவே தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தமிழன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால், பிரியங்கா சோப்ரா தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *